ஆரஞ்சு எச்சரிக்கையில் திருவள்ளூர்! தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு
திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மோந்தா புயல் காரணமாக, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மோந்தா புயல் நாளை காலை அதிதீவிரப் புயலாக மாறி, மாலை அல்லது இரவில் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடக்கவிருக்கிறது.
அதையொட்டி சென்னையில் நாளை தரைக் காற்றின் வேகம் சிறிது உயர வாய்ப்புள்ளது, அந்த நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அதி கனமழை பெய்யலாம் என்பதால், வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, பேரிடர் மீட்பு படையினர் திருவள்ளூரில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் மீட்புப் படை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 90 பேர் கொண்ட 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு குழு கொளத்தூர் பகுதியிலும், இரண்டு குழுக்கள் வெவ்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.