மாணவர்களை விளையாட்டுத் துறையில் சாதிக்க ஊக்குவிக்கும் அரசு: அன்பில் மகேஸ்
தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மாணவர்களை விளையாட்டுத் துறையில் சாதிக்க ஊக்குவிக்கிறார்கள் என்று அன்பில் மகேஸ் கூறினார்.
தஞ்சை: விளையாட்டுத்தானே என்று எண்ணாமல் மாணவர்கள், விளையாட்டையும் வாழ்க்கைத் தொழிலாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
66 வது குடியரசு தின மாநில அளவிலான தடகள போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவ - மாணவிகளை அரசு வேலையில் அமர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளை துணை முதல்வர் உதயநிதி மேற்கொண்டு வருகின்றார் எனக் கூறினார்.
தஞ்சாவூர் அன்னை சத்தியா விளையாட்டு அரங்கில் 66-ஆவது குடியரசு தின மாநில அளவிலான தடகளப் போட்டிகள் இன்று தொடங்கியது. வரும் மூன்றாம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
Advertisement
Advertisement
தஞ்சாவூர், சென்னை, நாமக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, சேலம், திருப்பத்தூர், கோவை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று முதல் வருகிற 3- ஆம் தேதி வரை மாணவிகளுக்கும் நவ.1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை மாணவர்களுக்குமான இந்த தடகளப் போட்டி நடைபெற உள்ளது.
100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டியில் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், பள்ளி மாணவ - மாணவிகள் விளையாட்டு துறையில் தேசிய அளவில் தங்க பதக்கங்களை வென்று வருகின்றனர். தொடர்ந்து அவர்களை ஊக்குவிப்பு செய்வதற்கான கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விளையாட்டு துறை மூலம் மாணவ மாணவிகளை நேரடியாக அரசு வேலை அமர்த்துவதற்கான அனைத்து வேலைகளையும் துணை முதலமைச்சர் செய்து வருகிறார். இது விளையாட்டு தானே என்று எண்ணாமல் - இதையும் வாழ்க்கைத் தொழிலாக மாற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.