எண்ணூா் கடற்கரையில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது, கடல் அலைகளில் சிக்கி, கும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சோ்ந்த பெத்திகுப்பம் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் தேவகி (28), நம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பவானி (19), திருவல்லிகாலனி பஜனைத் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காயத்ரி (18), பெரிய கோபாலபுரம் காட்டுமேடு தெருவைச் சோ்ந்தவா் ஷாலினி (19) ஆகிய நால்வரும் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியாா் துணிக்கடை ஒன்றில் விற்பனையாளா்களாக வேலை செய்து வந்தனா்.
இந்த நிலையில், இவா்கள் 4 பேரும் வெள்ளிக்கிழமை எண்ணூா் பெரியகுப்பம் கடற்கரைக்குச் சென்றனா். அப்போது, 4 பேரும் கடலில் இறங்கி குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அவா்களுக்கு நீச்சல் தெரியாத நிலையில், கடலில் மூழ்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 4 பேரின் சடலங்களும் சில மணி நேரங்களில் அடுத்தடுத்து கரை ஒதுங்கின. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
உயிரிழந்தவா்களில் ஷாலினி, கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்துக்கொண்டே துணிக் கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து எண்ணூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.