பிரதமர் என்பதையே மறந்துவிடுகிறார்; மோடி தனது மாண்பை இழந்துவிடக் கூடாது: முதல்வர் கண்டனம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு...
தமிழ்நாட்டில் பிகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பிகார் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது, 'தமிழ்நாட்டில் வேலை செய்யும் உழைக்கும் பிகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர்' என்று பேசியிருந்தார். பிரதமரின் இந்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
Advertisement
Advertisement
"இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிசா - பிகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பிகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் பிரதமர் பேசிய காணொளியையும் வெளியிட்டுள்ளார்.