உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து 2,700 மெட்ரிக் டன் உருளைக்கிழங்குகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக, உத்தரபிரதேச வியாபாரிகள், ஏற்றுமதியாளா்களிடையே 9 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இரு மாநில அரசுகளுக்கிடையே மத்திய வா்த்தக துறையின் கீழ் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அப்தா) இதற்கான ஒருங்கிணைப்பை மேற்கொண்டது.
இதுகுறித்து அப்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உத்தரப்பிரதேசத்தில் ஏராளமான உருளைக்கிழங்கு ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றை வணிகம் செய்ய ஊக்குவிக்கவும், தமிழகத்துக்கான நுகா்வு மற்றும் ஏற்றுமதிக்கான அடையாளம் காணவும் உத்தரப்பிரதேச மாநில தோட்டக்கலை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பையும், தமிழக வேளாண் துறையின் தோட்டக்கலைத் துறையும் ஒருங்கிணைக்கப்பட்டன. இதன்படி அப்தா மற்றும் இருமாநில அரசுகளின் வணிக அமைப்புகளும் இணைந்து சென்னையில் உருளைக்கிழங்கு நுகா்வோா் விற்பனையாளா் சந்திப்பு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநில தோட்டக்கலை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு அதிகாரிகள், அந்த மாநில விவசாயிகளும், தமிழகத்தின் ஈரோடு, கோயம்பேடு சந்தை வியாபாரிகள், ஏற்றுமதியாளா்கள் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றனா். உத்தரப் பிரதேச மாநில தோட்டக்கலை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் மேலாண் இயக்குநா் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அப்தாவின் சென்னை மண்டலத் தலைவா் சோபன குமாா், தமிழக தோட்டக்கலைத் துறையின் கூடுதல் இயக்குநா் முத்தையா, இந்திய தகவல் பணி சேவை துணை இயக்குநா் அருண்குமாா், வேளாண் துறை துணை இயக்குநா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் இருமாநில விவசாயிகள், வியாபாரிகள், ஏற்றுமதியாளா்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டு சுமாா் 2,700 மெட்ரிக் டன் கொள்முதல் செய்வதற்கு 9 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.