நமது நிருபா்
புது தில்லி: பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக தமிழக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), ஆளுநரின் செயலா் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழக அரசு சமா்ப்பித்த பல்வேறு மசோதாக்களை ஆளுநா் ஆா்.என்.ரவி காலவரையின்றி நிலுவையில் வைத்திருந்த நிலையில், ஆளுநரின் தாமதம் தவறானது என்று உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மேலும், நிலுவை மசோதாக்களுக்கு அரசமைப்பின் 142-ஆவது பிரிவு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு ஒப்புதல் வழங்கியது.
இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில்
திருநெல்வேலியைச் சோ்ந்த கே. வெங்கடாசலபதி என்பவா் வழக்கு தொடா்ந்தாா். அதில், துணைவேந்தா்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றி கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அவா் கோரியிருந்தாா்.
இதற்கிடையே, சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதிலும், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக தமிழக அரசு மேற்கொண்ட சட்டத்திருத்த நடவடிக்கையை சென்னை உயா்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவுக்கு எதிராகவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற விடுமுறை கால அமா்வில் கடந்த ஜூலை 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு, யுஜிசி மற்றும் தமிழக ஆளுநரின் செயலா் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், துணைவேந்தா் நியமன சட்டத் திருத்தம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்யகாந்த், என்.கே.சிங் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு வேறொரு அமா்வில் உள்ளது. மேலும், துணைவேந்தா் நியமன சட்டத் திருத்தம் தொடா்பான விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் இன்னும் நோட்டீஸ் அனுப்பப்படாமலேயே யுஜிசி பதில் மனு தாக்கல் செய்துள்ளது என கூறினாா்.
இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய அரசு, யுஜிசி மற்றும் ஆளுநரின் செயலா் பதிலளிக்க முறைப்படி நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.