முகப்பு
தமிழ்நாடு

மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்

மகன் லோகேஷ், தவெகவில் இணைந்தது ஏன் என்பது குறித்து முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கொடுத்துள்ளார்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 1:11 PM
முன்னாள் பேரவைத் தலைவா் தனபால் - (கோப்புப் படம்)
பகிர்:

தன்னுடைய மகன் லோகேஷ், தவெகவில் இணைந்திருப்பது பற்றி முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த முன்னாள் பேரவைத் தலைவர் தனபாலின் மகன் லோகேஷ், தவெகவில் இணைந்து தற்போது ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், தனபால் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிமுகவில் 1972ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறேன். பல்வேறு துறைகளின் அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளேன். 2016ஆம் ஆண்டு பேரவைத் தலைவர் பொறுப்பினை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு வழங்கினார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளையும் வழங்கியிருந்தார்.

ஆனால், கடந்த ஆறு மாதமாக எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். என்னை அதிமுக சார்பில் யாரும் வந்து பார்க்கவோ, விசாரிக்கவோ இல்லை. எனக்கு 1988ல், உடல்நிலை சரியில்லாமல் போனபோது, ஜெயலலிதா அவர்கள் நேரில் வந்து நலம் விசாரித்தார். தாயில்லாத நிலையை நான் இப்போது உணர்கிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட நான் வாய்ப்பு கேட்டேன். ஆனால், எனக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. இதில் எனக்கு வருத்தம் இல்லை. என்னை வந்து பார்க்கவில்லையே என்பதுதான் வருத்தம் அளிக்கிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில்தான் என்னுடைய மகன் லோகேஷ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, தற்போதுராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

என்னைப் பொறுத்தவரையில், எனக்கு ஆதியும் அந்தமும் அதிமுகதான் என்று தனபால் தெரிவித்துள்ளார்.

summary

Former Assembly Speaker Dhanapal has explained why his son Lokesh joined the TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.