பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு
சேலம் மாவட்டத்தில் பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குடும்பத் தகராறு காரணமாக, ஸ்ரீவித்யாவை, அவரது கணவர் விஜயமுருகன் வெட்டிக் கொலை செய்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீவித்யா - விஜயமுருகன் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியை ஸ்ரீவித்யாவை, திடீரென பள்ளிக்குள் நுழைந்து விஜயமுருகன் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீவித்யா படுகாயமடைந்தார்.
Advertisement
Advertisement
உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பள்ளி ஊழியர்களும் அக்கம் பக்கத்தினரும் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
சம்பவம் குறித்து தகவலறிந்ததும், ஓமலூர் மாவட்ட டிஎஸ்பி சஞ்சீவ்குமார், கொலை நடந்த இடத்துக்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து, சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் பள்ளிக்குள் நுழைந்து மனைவியை கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய விஜயமுருகனை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.