2025-ல் பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!
கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பழிக்குப் பழியாக கொலையாளியை பெண்ணின் தந்தை கொன்ற சம்பவம் பற்றி..
பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த மகளை பள்ளி செல்லும்போது வெட்டிக் கொன்ற இளைஞரை பழிக்குப் பழியாக கொலை செய்த தந்தை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் அருகே பிராந்தை பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் புண்ணியமூர்த்தி (53). தி.மு.க.வைச் சேர்ந்த ஆலங்குடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவரது மகள் காவியா (26). இவர், ஆலங்குடி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில், தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
மேலகளக்குடியை சேர்ந்த கருணாநிதி மகன் அஜித்குமார் (30). பெயிண்டராக இருந்தார். காவியாவும், அஜித்குமாரும், கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், காவியாவின் பெற்றோருக்கு, அஜித்குமாரை திருமணம் செய்து வைக்க விரும்பம் இல்லை. இதையடுத்து காவியாவை அவரது பெற்றோர் வற்புறுத்தி, உறவுக்கார பையனுக்கு திருமணம் செய்து வைக்க, நிச்சயதார்த்தம் செய்தனர். நிச்சயதார்த்தம் நடந்த தகவலையும், அதற்கான போட்டோக்களையும் அஜித்குமாருக்கு, காவியா அனுப்பி உள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அஜித்குமார் கடந்த 2025ம் ஆண்டு நவ.27ம் தேதி காலை, வழக்கம் போல, பள்ளிக்கூடத்திற்கு வந்த கவியாவை வழிமறித்து, கத்தியால் தலையில் வெட்டிக்கொலை செய்தார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் அஜித்குமார் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதையறிந்த கவியாவின் தந்தை புண்ணியமூர்த்தி, மகளை கொலை செய்த, அஜித்குமாரை பழி தீர்க்கும் விதமாக கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, புண்ணியமூர்த்தி தனது உறவினரான ஆலங்குடி, கன்னித்தோப்புப் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் லோகேஷ் (22), துரைராஜ் மகன் ராமலிங்கம் (30), புலவர்நத்தம் பகுதியைச் சேர்ந்த அமுதன் மகன் கருப்பையா (55) ஆகியோர் இன்று (25ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு, அஜித்குமார் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த போது, வீட்டின் உள்ளே புகுந்து அஜித்குமாரை மூன்று அரிவாளால் சராமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அஜித்குமாரை கொலை செய்த புண்ணியமூர்த்தி, லோகேஷ், ராமலிங்கம், கருப்பையா ஆகிய நான்கு பேரும், அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர்.
இதையடுத்து மெலட்டூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமார் உடலைக் கைப்பற்றி, உடல் கூராய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகளை கொலை செய்த இளைஞரை பழிக்குப் பழியாக, மகளின் தந்தையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About the incident where the girl's father killed the killer in revenge for the murder of a teacher at school last year.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.