திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்; அதனால்தான் வரவில்லை: அண்ணாமலை
கோவை சிங்காநல்லூரில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு...
தமிழ்நாட்டில் திமுக தோற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைக்கிறார் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர். ஜெயராமை ஆதரித்து ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை,
Advertisement
"காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரி வந்தபோது தமிழகத்திற்கு வரவில்லை. தமிழ்நாட்டில் திமுக தோற்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். கேரளத்தில் பிரசாரம் முடித்து கோவை விமான நிலையம் வந்த அவர் இங்கு தேர்தல் பிரசாரம் செய்யவில்லை. விமான நிலையம் இருக்கும் பகுதி கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி. அங்கு காங்கிரஸ் வேட்பாளர்தான் போட்டியிடுகிறார். அவருக்கு ஏன் பிரசாரம் செய்யவில்லை.
திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்கள் இருவருக்கும் இந்த கூட்டணியில் விருப்பம் இல்லை. இரு கட்சிகளுக்குமே தோல்வி பயம் இருக்கிறது. தேர்தல் முடிவு தெரிந்துவிட்டது. அதனால்தான் ராகுல் காந்தி இங்கு வரவில்லை. கொங்கு மண்டலத்தில் உள்ள 21 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வெல்லும்" என்று பேசினார்.