சமூகம் தழைக்க தமிழ்நாடு வெல்லும்! திருமாவளவன் நம்பிக்கை
மீண்டும் மு.க. ஸ்டாலினின் திராவிட முன்மாதிரி ஆட்சி மலரும் என திருமாவளவன் நம்பிக்கை...
இரண்டு கருத்தியலுக்கு இடையிலான யுத்தத்தில் தமிழ்நாடு வெல்லும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர்.
Advertisement
அந்தவகையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களுடன் பேசியதாவது:
''முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்னதைப்போல, இந்தத் தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு இடையிலான யுத்தமில்லை. இரண்டு அணிகளுக்கு இடையிலான யுத்தம் இல்லை. இரண்டு கருத்தியலுக்கு இடையிலான யுத்தம். அந்த யுத்தத்தில் தமிழ்நாடு வெல்லும்.
மீண்டும் மு.க. ஸ்டாலினின் திராவிட முன்மாதிரி ஆட்சி மலரும். சமூகம் தழைத்தோங்கும். எங்களை எதிர்த்து நிற்கும் சந்தர்ப்பவாதிகளுக்கு மக்களிடம் நன்மதிப்பு இல்லை'' என திருமாவளவன் குறிப்பிட்டார்.