முகப்பு
தமிழ்நாடு

எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்?

தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:28 PM
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை - DPS
பகிர்:

சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

நான்கு அடுக்குப் பாதுகாப்பு, வளாகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், 24 மணி நேர கண்காணிப்பில் ஊழியர்கள், ஒரு இம்மிகூட நகராத துணை ராணுவப் படை வீரர்களின் பாதுகாப்பில், அடுத்த ஐந்தாண்டுகள் தமிழ்நாட்டை ஆள போவது யார் ? என்பதை தீர்மானிக்கும், வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நிறைவுபெற்ற நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

Advertisement

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று மாலை 7 மணி முதல் அந்தந்தத் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாகனம் மூலம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை பகுதியில் இயங்கும் அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக சரி பார்த்து வைக்கப்பட்டது.

இதுபோல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளில் சீலிடும் பணிகளில் தேர்தல் மேலிடப் பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர், எஸ்பி மற்றும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு அந்தப் பகுதி துணை ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் அனைத்து அறைகளும் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் இந்த வளாகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நபர்களின் நடமாட்டங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 24 மணி நேரமும் ஊழியர்கள் பணிபுரியும் வகையில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.

காவல்துறையினரும் வாக்கு எண்ணும் மையங்களில் சுழற்சி முறையில் பணிபுரியும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நான்கு அடுக்குப் பாதுகாப்புகள் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு போடப்பட்டுள்ளன.

மேலும் வேட்பாளர், முகவர்கள் ஆகியோர், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை டிவிகள் மூலம் வளாகத்தின் ஒரு பகுதியில் இருந்து 24 மணி நேரமும் பார்வையிடும் வகையில் அவர்களுக்கான அறையும் அமைக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

எனவே, இன்னும் முழுமையாக 9 நாள்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கவிருக்கின்றன.

summary

Regarding the placement of electronic voting machines where people voted in the Tamil Nadu Assembly elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.