வெப்ப அலை: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு அமைக்க சுகாதாரத் துறை உத்தரவு!
வெப்ப அலை பாதிப்பைத் தடுக்க அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
தமிழ்நாட்டில் வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகமாக இருந்து வருவதால் மக்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீர்ச்சத்து இழப்பு, ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டும் முறையாக சிகிச்சை அளிக்கும்பொருட்டும் அரசு மருத்துவமனைகளில் 'ஹீட் ஸ்ட்ரோக்' என்ற பெயரில் சிறப்பு வார்டு அமைக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
Advertisement
அதேபோல வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க, தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ORS (உப்புச் சர்க்கரை கரைசல்) தடையின்றி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல விவசாய கூலித் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்க வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகளில் ஒஆர்எஸ் கரைசலை பொதுமக்கள் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள், இதுதொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.