மே 4 ஆஸ்திரேலியா செல்கிறாரா விஜய்? ஆதவ் அர்ஜூனா விளக்கம்
தவெக தலைவர் விஜய் மே 4 அன்று ஆஸ்திரேலியா செல்கிறாரா என்பதுகுறித்து ஆதவ் அர்ஜூனா விளக்கம் கொடுத்துள்ளார்.
ஒட்டுமொத்த தமிழ்நாடும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், அன்றைய நாளில் தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
பொதுவாக, கொளுத்தும் வெய்யிலில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் முடிந்ததும் ஓய்வுக்காக சென்னையிலிருந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்வது வழக்கம். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் மே 4ஆம் தேதி இரவு ஆஸ்திரேலியா செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாகத் தகவல்கள் பரவின.
Advertisement
ஆனால், அது உண்மையில்லை என்று ஆதவ் அர்ஜூனா கூறியிருக்கிறார். மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மட்டுமே விஜய் சிந்தித்து வருகிறார். மே 4ஆம் தேதி விஜய் ஆஸ்திரேலியா செல்லவில்லை. நிலவுக்கு செல்லவிருக்கிறார். திமுகதான் அதற்கான ராக்கெட்டைத் தயார் செய்து வருகிறது என்று கிண்டலமாக பதிலளித்தார்.
இதெல்லாம் வீண் வதந்திகள், இதற்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம், திமுக பரப்பி வரும் வதந்தி என்றும் ஆதவ் அர்ஜூனா பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்திருக்கும் நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி அன்று மாலை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த முறை தவெகவின் வரவால் போட்டி சற்று கடுமையாக மாறியிருந்தது.
தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், அரசில் கட்சிகள், கூட்டணி பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு பிறகு சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.
இந்த நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்து, தமிழ்நாடு தேர்தல் பரபரப்பு அடங்கி அமைதியாக இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது.