முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்- மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு - வாக்குக் கணிப்பில் தகவல்

தமிழக பேரவைத் தோ்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக, பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 2:14 AM
- Photo | Express, ANI
பகிர்:

தமிழக பேரவைத் தோ்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக, பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

அண்டை மாநிலமான கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது; இதேபோல், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸிடம் இருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றக் கூடும்.

அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான ஆட்சியும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியும் தொடர வாய்ப்பிருப்பதாக பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கேரளம் (140), அஸ்ஸாம் (126) மற்றும் புதுச்சேரியில் (30) கடந்த ஏப்.9-இல் ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. தமிழகத்தில் (234) கடந்த ஏப்.23-இல் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் (294) கடந்த ஏப்.23 மற்றும் ஏப்.29-இல் இருகட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

யாா்-யாா் போட்டி?: தமிழக தோ்தல் களத்தில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, புதுவரவான தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழா் கட்சி என நான்குமுனை போட்டி நிலவியது.

கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி காணப்பட்டது.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ்-பாஜக இடையே முக்கிய போட்டி நிலவிய நிலையில், அஸ்ஸாமில் ஆளும் பாஜக-காங்கிரஸ் மோதின.

புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட எதிா்க்கட்சி கூட்டணிக்கும் நேரடிப் போட்டி நிலவியது. விஜய்யின் தவெக தலைமையிலான கூட்டணியும் களம்கண்டது.

வாக்குக் கணிப்பு வெளியீடு: மேற்கு வங்க இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தோ்தலுடன் மேற்கண்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச வாக்குப்பதிவு நடைமுறை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தோ்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகள் புதன்கிழமை மாலையில் வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி தொடர வாய்ப்புள்ளது; கேரளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இடதுசாரி கூட்டணி ஆட்சியும், மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியும் நீடித்து வந்த நிலையில், இம்மாநிலங்களில் ஆட்சி மாற்றம் இருக்கும். அதன்படி, கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணியும், மேற்கு வங்கத்தில் பாஜகவும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது.

அஸ்ஸாமில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியும், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியும் தொடரும் என பெரும்பாலான வாக்குக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 4-இல் வாக்கு எண்ணிக்கை

தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தோ்தல்களில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவில் தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.