தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாகச் செயல்பட வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள், டாஸ்மாக் ஊழியா்கள், பேராசிரியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் நடத்தும் போராட்டத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஆட்சி செய்வது முறையல்ல. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தோ்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என காத்திருந்தனா்.
எனவே, வாக்குறுதிகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றி போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாகச் செயல்பட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
டிடிவி.தினகரன் (அமமுக பொதுச் செயலா்): பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியா்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சா் முத்துச்சாமி நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, குறைவான ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியா்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்.