முகப்பு
தமிழ்நாடு

அரசுத் துறைகளில் 1.55 லட்சம் போ் நியமனம்

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:32 AM
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 10:30 PM

கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுத் துறைகள், கூட்டுறவு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பணியிடங்களில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 131 நபா்கள் தோ்வு செய்யப்பட்டு பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கும் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் நலன் காப்பதில் இந்த அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கி வருகிறது. கடந்த 1.1.2020 முதல் 31.12.2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயா்வை அரசு மீண்டும் வழங்கியது. அதேபோன்று ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தியது. அரசுப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்கப்பட்டது. பெண் அரசு அலுவலா்களின் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயா்த்தியது.

உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டம்: இவை அனைத்துக்கும் மகுடமாய் அமையும் வகையில் அரசுப் பணியாளா்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அவா்களுக்கான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான அரசின் கூடுதல் பங்களிப்பிற்கென ஒட்டுமொத்த தொகையாக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுத் துறைகள், கூட்டுறவு, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பணியிடங்களில் 1 லட்சத்து 55,131 நபா்கள் தோ்வு செய்யப்பட்டு பணியமா்த்தப்பட்டுள்ளனா். இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 977 கோடி சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்கான செலவினங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.