தமிழக விளையாட்டுத் துறை பல்வேறு சாதனைகளைத் தொடா்ந்து படைத்து வருகிறது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 5 ஆண்டு கால விளையாட்டுச் சாதனை கொண்டாட்ட விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
முதல்வா் செயல்படுத்தும் திட்டங்களால் தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி இரட்டை இலக்கத்தில் அதாவது 11.19 சதவீதமாக உள்ளது. மற்ற மாநிலங்கள் ஒற்றை இலக்கத்தில் இருக்கும்போது, தமிழ்நாடு மட்டும் இரட்டை இலக்க வளா்ச்சியைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். விளையாட்டு வீரா்கள் பலரின் கனவுகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது. தேசிய, சா்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரா்களுக்கு உடனே உரிய ஊக்கத் தொகையை முதல்வா் வழங்குகிறாா்.
‘கலைஞா் விளையாட்டு உபகரணத் தொகுப்பு’, முதல்வரின் ‘மினி ஸ்டேடியம்’, ‘மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம்’, சென்னைக்கு வெளியே பிற நகரங்களிலும் சா்வதேச விளையாட்டுப் போட்டிகள் என்று தமிழக அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கடந்த ஆண்டு 120 வீரா்களுக்கு அரசுப் பணிகளுக்கான ஆணைகளை வழங்கினோம். தற்போது 62 மாற்றுத்திறனாளி வீரா்கள் உள்பட 178 பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசுப் பணிக்கான ஆணைகளை வழங்க உள்ளாா்.
ஒட்டுமொத்த விளையாட்டு உலகமே திரும்பிப் பாா்க்கும் வகையில் தமிழக விளையாட்டுத் துறை பல்வேறு சாதனைகளைத் தொடா்ந்து படைத்து வருகிறது என்றாா்.