சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் (ஐ.எம்.யு.எல்.) தேசியத் தலைவர் காதர் மொகிதீன் மயங்கி விழுந்தார்.
உடன் இருந்த நிர்வாகிகள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்க அண்ணா அறிவாலயத்திற்குள் அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி ஏப்ரலில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில், கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் திமுக இன்று முதல் (பிப். 22) ஈடுபட்டு வருகிறது. முதல் வாய்ப்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்தது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஐ.எம்.யு.எல். தேசியத் தலைவர் காதர் மொகிதீன் உள்பட அக்கட்சி நிர்வாகிகளுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், திமுக கூட்டணியில் ஐ.எம்.யு.எல். சார்பில் 5 தொகுதிகள் ஒதுக்குமாறு கோரப்பட்டுள்ளது. 5 தொகுதிகள் ஒதுக்காவிட்டால், 4 தொகுதிகள் வழங்குமாறு கேட்டுள்ளதாக அண்ணா அறிவயலத்திற்கு வெளியே நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது காதர் மொகிதீன் தெரிவித்தார்.
செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அக்கட்சி நிர்வாகிகள் அவரை முதலுதவிக்காக அண்ணா அறிவாயலத்திற்குள் தூக்கிச் சென்றனர். ரமலான் மாதத்தையொட்டி நோன்பு இருந்துவந்த நிலையில், நீண்ட நேரம் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்ததால், மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.