சென்னைக்கு அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் ராகுல் நவீன் வியாழக்கிழமை வருகை தரவுள்ளார்.
தில்லியில் இருந்து வருகைதரும் ராகுல் நவீன், சென்னையில் மூன்று நாள்கள் முகாமிட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.
மேலும், தற்போது நீதிமன்றங்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி, அமலாக்கத் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில், அமைச்சர் கே.என். நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.