கருப்புக்காக ரூ. 1 கோடி வழங்க முன்வந்த இயக்குநர் ஹெச். வினோத்!
ஹெச். வினோத் கருப்பு திரைப்படத்திற்காக உதவ முன்வந்தது குறித்து....
இயக்குநர் ஹெச். வினோத் கருப்பு திரைப்படத்தின் நிதிப் பிரச்னைக்காக ஒரு கோடி வழங்க முன்வந்தது தெரியவந்துள்ளது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ. 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியதுடன் ஓடிடி வெளியீட்டுக்குப் பின்பும் 5-வது வாரமாக திரையரங்குகளில் கணிசமான கூட்டமும் இருக்கிறது.
Advertisement
Advertisement
முதலில் இப்படம் மே. 14 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் கடனில் இருந்ததால் திடீரென அன்று வெளியாகமால் பெரிய பாதிப்பைச் சந்தித்தது. நடிகர் சூர்யா நேரடியாக இப்பிரச்னையைத் தீர்க்க சில கோடிகளை வழங்கியதாலும் சில உத்திரவாதங்களைக் கூறியதால் அடுத்தநாளில் வெளியானது. அந்த முதல் நாளில் பல கோடிகள் நிலுவையில் இருந்ததால் பலரிடமும் தயாரிப்பு நிறுவனம் உதவி கோரியிருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், “கருப்பு திரைப்படம் பெரிய நிதிச் சிக்கலைச் சந்தித்தபோது படத்தின் நாயகனாக சூர்யா முன்னின்று உதவிகளைச் செய்தார். ஆனால், கடன் தொகை மிகப்பெரியது எனத் தெரிய வந்ததும் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என விலகிக்கொண்டார். அந்த நேரத்தில் தயாரிப்பு நிறுவனத்திற்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. சிலரிடம் உதவி கேட்டும் மறுக்கப்பட்டு விட்டது. ஆனால், இயக்குநர் ஹெச். வினோத் தயாரிப்பாளரை அழைத்து நான் ரூ. 1 கோடி தருகிறேன் எனக் கூறியிருக்கிறார். இயக்குநர் வினோத்தை வைத்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர் நிறுவனம் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தயாரித்திருந்தது. அந்த உறவிற்காக அவராக முன்வந்தார். வினோத்தைப் பாராட்ட வேண்டும். ஆனால், அதே நிறுவனத்தில் மாநகரம், கைதி ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்து மிகப்பெரிய இடத்திற்குச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எந்த உதவியையும் செய்யவில்லை. நம்மை வளர்த்திவிட்டவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உடன் நிற்க வேண்டும். அந்த நன்றியை மறக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.