வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்
சென்னை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேட்டி...
தமிழகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் 10 நாள்கள் முன்புவரை, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறினார்.
சென்னை தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களுடன் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 'வாக்காளர் பட்டியலில் மேலும் பெயர்களைச் சேர்க்க முடியுமா?' என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில்,
"தகுதியான ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
இப்போது இறுதி வாக்காளர் பட்டியல் பிப். 23 அன்று வெளியான நிலையிலும், அதில் பெயர் இடம்பெறவில்லை என்றால் தகுதியுள்ள ஒருவர் படிவம் 6 மூலமாக உரிய ஆவணங்களுடன் தங்கள் பெயரைச் சேர்க்கலாம். படிவம் 7 மூலமாக நீக்கம் செய்யலாம், படிவம் 8 மூலமாக வாக்குச்சாவடி மாற்றத்திற்கு, தொகுதி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த 3 படிவங்களும், தேர்தல் அறிவித்து வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலுக்கு 10 நாள்களுக்கு முன்வரை சமர்ப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பித்து 7 முதல் 10 நாள்களுக்குள் சரிசெய்யப்படும். உங்கள் விண்ணப்பம் வந்தவுடன் அதை தேர்தலை அதிகாரிகள் அறிவிப்புப் பலகையில் ஒட்டுவார்கள். யாரும் ஆட்சேபனை தெரிவிக்காதபட்சத்தில் வேட்புமனு தாக்கல் இறுதி நாளுக்குள் முடிவு செய்யப்படும். வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் அந்தந்த தொகுதி வாக்காளர் பட்டியல் வேட்பாளர்களுக்கு, வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்படும்.
அதேபோல திருமணம் ஆனவர்களும் எளிதாக ஆன்லைன் அல்லது தேர்தல் ஆணைய செயலி மூலமாக தங்களுடைய தொகுதி மாற்றத்திற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். வாக்குச்சாவடி அலுவலர் நேரில் வந்து சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுப்பார்" என்று கூறினார்.
மேலும் பத்திரிகையாளர்களுக்கு தபால் வாக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் கோரிக்கை வைத்ததற்கு, 'அதுகுறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்' என்று கூறினார்.
More names can be added to the voter list! - Chief Election Commissioner Gyanesh Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.