பொங்கல் திருநாளில் பேதங்களுக்கு இடமில்லை என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை மாலை கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயப் பெருமக்களின் அறுவடைக் காலம் முடிந்த பிறகு ஊரே கூடி மகிழ்ந்திருப்பதுதான் பொங்கல் திருநாள். இதில் பேதங்களுக்கு இடமில்லை. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். பிற பகுதிகளில் வாழக்கூடிய விவசாய பெருமக்களுக்கு சங்கராந்தி வாழ்த்துகள். நொய்யல் ஆற்றை மீட்டு, புதுப்பித்து எடுக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம் என்றார் அவர்.
கோவையில் இருந்து கார் மூலம் திருப்பூருக்குச் சென்ற அவர் அங்கு தனது உறவினர் இல்லத்தில் இரவு தங்கி வியாழக்கிழமை தனது இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் இல்ல திறப்பு விழாவில் கலந்து கொண்டு பின் கோவை செல்கிறார். பிற்பகல் 2.30 மணியளவில் கோவைக்கு வரும் அவர் சிட்ரா சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்கிறார். பின்னர் 4.30 மணியளவில் கொடிசியா அரங்கில் நடைபெறும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, இரவு 7 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கிறார். முன்னதாக, கோவை விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மக்களவை உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார், மேற்கு மண்டல ஐ.ஜி.சரவணசுந்தர், மாநகரக் காவல் ஆணையர் கண்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.