பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையொட்டி, ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். பாலமேட்டில் மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதன்படி, இன்று (ஜன.16) பாலமேட்டில் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
காலை 7 மணிக்குத் தொடங்கவிருந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவிருந்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையில் தாமதம் ஏற்பட்டதால், காலை 9 மணிக்கு போட்டி தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரத் தாமதம் ஆனதால் போட்டிகள் முன்னதாகத் தொடங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் வீரர்கல் உறுதிமொழி எடுத்துக் கொண்ட நிலையில், கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர், ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் திடலுக்கு தாமதமவந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர் பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பி. மூர்த்தி, சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ. வெங்கடேசன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்தப் போட்டியில் சுமார் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறுகிறது. சுற்றுக்குத் தலா 50 வீரர்கள் களமிறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.