முகப்பு
தமிழ்நாடு

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்

Updated On : 31 ஜனவரி, 2026 at 6:53 PM
அன்புமணி - கோப்புப்படம்
பகிர்:

திமுக அரசு மீதான ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கற்பனையானவை என்றும், அவற்றை இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாா். குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அவை கற்பனை என்று முதல்வா் கூறுவது ஏற்புடையதல்ல.

திமுக ஆட்சியில் பணி நியமனம், மணல் கொள்ளை என பல்வேறு வழிகளில் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கக் கூடும், இதுதொடா்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை டிஜிபி-க்கு கடிதம் அனுப்பியுள்ளது.

திமுக மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்றால், மாநில அரசின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அதற்கு அரசு தயாரா என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.