காங்கிரஸுக்கு எம்.பி. சீட்; முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை! கிரிஷ் சோடங்கர்
முதல்வர் விஜய்யை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் எம்பி சீட் கேட்டிருப்பது பற்றி...
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து மாநிலங்களவை இடம் கேட்டதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சி.வி. சண்முகம், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த நிலையில், காலியாக இருக்கும் இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட தவெக நிறுத்தும் வேட்பாளரே தேர்தலில் வெற்றி பெறுவார். ஆனால், வேட்புமனுத் தாக்கல் தொடங்கி மூன்று நாள்களாகும் நிலையில், இன்னும் தவெக வேட்பாளரை அறிவிக்கவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலரும் மேலிடப் பொறுப்பாளருமான கிரிஷ் சோடங்கர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “காங்கிரஸுக்கு மாநிலங்களவை சீட் அளிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முதல்வர் விஜய் பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
காங்கிரஸுக்கு அந்த சீட்டை தவெக அளிக்கும் என நம்பிக்கை இருக்கிறது. விரைவில் மாநிலங்களவை வேட்பாளரை முதல்வர் விஜய் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து மாநிலங்களவை இடம் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
தவெக தனது முதல் எம்.பி.யை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் என்று அக்கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குப் பிறகு தவெக கூட்டணியில் இணைந்தது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.