இது மக்கள் உத்தரவு! முதுகில் குத்த முடியாது: காங்கிரஸ்
தவெகவுடன் காங்கிரஸ் இணைந்தது தொடர்பாக கிரிஷ் சோடங்கர் தெரிவித்தது குறித்து...
தவெகவுடன் காங்கிரஸ் இணைந்தது தொடர்பாக, “இது மக்கள் உத்தரவு, நாம் முதுகில் குத்த முடியாது” என்று தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை தவெக தலைவர் விஜய் புதன்கிழமை (மே 6) சந்தித்து உரிமை கோரினார்.
அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று விஜய்யிடம் ஆளுநர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை (மே 7) காலை மீண்டும் தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்த பிறகு, ஆளுநர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, 118 எம்எல்ஏக்களின் பட்டியலை தவெக தலைவர் விஜய் வழங்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் திட்டவட்டமாக மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவளித்திருந்தது. மேலும், இடது சாரிகள் மற்றும் விசிகவின் ஆதரவை தவெக தலைவர் விஜய் நாடியுள்ளார்.
காங்கிரஸின் இந்த நிலைப்பாடு குறித்து திமுகவினர் சிலர், “காங்கிரஸ் கட்சி திமுகவின் முதுகில் குத்தியது” எனக் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து பேசிய கிரிஷ் சோடங்கர், “நாங்கள் எப்போதும் அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநிறுத்தி வருகிறோம். இதனைப் பாதுகாக்கத்தான் எங்கள் தலைவர் ராகுல் காந்தி போராடி வருகிறார். இன்று ஜனநாயகம், அரசியலமைப்பு, மக்களின் உத்தரவு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாங்கள் மக்களின் உத்தரவை மதிக்கிறோம். ஆகையால், எங்களால் முதுகில் குத்த முடியாது” எனத் தெரிவித்தார்.