அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: காங்கிரஸ்
தமிழக அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி என கிரிஷ் சோடங்கர் பேசியது குறித்து...
தமிழக அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று (மே 20) தெரிவித்தார்.
59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது சிறப்பான ஆட்சியாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான ராஜேஷ்குமார், பி. விஸ்வநாதன் ஆகியோரை தவெக அமைச்சரவையில் நியமிக்க காங்கிரஸ் தலைமை இன்று (மே 20) ஒப்புதல் வழங்கியது. இவர்கள் இருவரும் அமைச்சர்களாக நாளை (மே 21) பொறுப்பேற்கவுள்ளனர். இதன்மூலம் தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இடம்பெறவுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுடன் கிரிஷ் சோடங்கர் பேசியதாவது:
''தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சர்களாக ஒப்புதல் அளிக்கப்பட்ட இருவர் நாளை பதவியேற்கவுள்ளனர்.
அமைச்சரவையில் காங்கிரஸுக்கு எந்தத் துறை ஒதுக்கினாலும் மகிழ்ச்சிதான். அதை முதல்வர் விஜய் முடிவு செய்வார். அதனை காங்கிரஸ் ஏற்கும்.
மக்கள் இந்த ஆட்சியை கொண்டாடுகின்றனர். இது சிறப்பான ஆட்சியாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையின் மூலம் மக்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்'' எனக் குறிப்பிட்டார்.
வெறும் அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவது அது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல; ஒரு உணர்வு என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
''மீண்டும் கதர் ஆடை அணிந்த காங்கிரஸ் அமைச்சர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் அமர்கிறார்கள்.
அது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல. ஒரு உணர்வு. ஒரு வரலாற்று தருணம்.
காமராஜர் காலத்தின் அரசியல் மரபு, எளிமை, தேசிய சிந்தனை, தியாக அரசியல் மற்றும் கூட்டணி மரியாதை மீண்டும் தமிழ்நாட்டு ஆட்சியில் இடம் பெறும் தருணம் இது.
கதர் ஆடை மீண்டும் அமைச்சரவை மேசையில் அமருவது, அது வெறும் ஆடை அல்ல, ஒரு அரசியல் பாரம்பரியம். ஒரு சிந்தனை. ஒரு தியாகத்தின் அடையாளம்.
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பி. விஸ்வநாதன் ஆகியோர் விஜய் தலைமையிலான அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்கிறார்கள் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.
தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இந்தியாவின் நம்பிக்கை ராகுல் காந்தி முன்வைக்கும் மக்கள் நலன், சமூக நீதி, இணைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் ஏழை எளிய மக்களை மையமாகக் கொண்ட ஆட்சிக் கண்ணோட்டத்தை செயல்படுத்தும் அரசாக இது அமையும் என்று நம்புகிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
We are happy with whatever portfolio is allotted Congress Girish Chodankar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.