தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர்
தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி...
தவெக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெறும் என்று தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து புதிய கூட்டணியை அறிவித்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்தனர். தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரின் ஆதரவுக் கடிதத்தையும் விஜய்யிடம் வழங்கியுள்ளனர்.
வரும் தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடரும் என்றும் அதேநேரத்தில் மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்றும் காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.
Advertisement
விஜய்யுடனான சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய கிரிஷ் சோடங்கர்,
"தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்து எங்களது ஆதரவை தெரிவித்தோம். எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் நாங்கள் அளித்துள்ளோம். மேலும் சில கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவளிக்க வேண்டும். த்வெகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். புதிதாக அமையும் தவெக அரசில் காங்கிரஸ் பங்கு பெறும்" என்று கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் இன்று பிற்பகல் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.