அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு!
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001-2006 காலகட்டத்தில் அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.7 கோடி (ரூ. 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384) சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடந்தாண்டு (2025) சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு தாக்கல் செய்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்து குவிப்பு வழக்கை மதுரையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தூத்துக்குடி நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.
The Madras High Court has ordered the extension of the interim stay on the trial of the disproportionate assets case pending against former Minister Anita Radhakrishnan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.