முகப்பு
தமிழ்நாடு

கரூா் தொகுதி காலியானதாக அறிவிப்பு

கரூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை எம்.ஆா்.விஜயபாஸ்கா் ராஜிநாமா செய்துள்ள நிலையில், அந்தத் தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பு அரசிதழில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 1 ஜூலை 2026, 1:55 am IST
தமிழக சட்டப்பேரவை - (கோப்புப்படம்)
பகிர்:

கரூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை எம்.ஆா்.விஜயபாஸ்கா் ராஜிநாமா செய்துள்ள நிலையில், அந்தத் தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பு அரசிதழில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான சில நாள்களிலேயே திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை முதல்வா் ஜோசப் விஜய் ராஜிநாமா செய்தாா்.

இதனால், பேரவையின் பலம் 233-ஆக குறைந்தது. இந்தச் சூழலில்தான் தவெக தலைமையிலான புதிய அரசு ஆட்சியமைத்தது. அதைத் தொடா்ந்து, அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமாா், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோா் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து, தவெகவில் இணைந்தனா். தொடா்ந்து விராலிமலை எம்எல்ஏவாக இருந்த சி.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூா் தொகுதி எம்எல்ஏவுமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் தனது பதவி விலகல் கடிதத்தை திங்கள்கிழமை (ஜூன் 29) சமா்ப்பித்தாா். அதை பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் ஏற்றுக்கொண்டாா்.

இதையடுத்து, கரூா் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் சாா்பில் அரசிதழில் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 7 தொகுதிகள் தற்போது தமிழகத்தில் காலியாக உள்ளன.

பொதுவாக ஒரு தொகுதி காலியானால் அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் நவம்பருக்குள் இந்த 7 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே 6 தொகுதிகளில் அதற்கான முன்னேற்பாடுகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments