அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?
தமிழகத்தில் இதுவரை, 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது குறித்து...
அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இசக்கி சுப்பையா ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்து, தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றார்.
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் முதல்வர் விஜய் போட்டியிட்டு இரண்டிலுமே வென்றதால், அதில் திருச்சி கிழக்கில் தனது எம்.எல்.ஏ பதவியினை ராஜிநாமா செய்தார். அப்போதே, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக, எஸ்.பி. வேலுமணி தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு என்று கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன. இது தொடர்பாக பல சிக்கல்கள் நீடித்து வந்தன.
இதனைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகியோர், திங்கள்கிழமை (மே 25) தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து அவர்களுடைய ராஜிநாமா கடிதத்தை அளித்தனர். மேலும், அதே நாளில் அவர்கள் மூவரும் தவெகவில் இணைந்தனர்.
ஆகையால், இந்த மூன்று தொகுதிகள் காலியானதாக இன்று அறிவிக்கபட்ட நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.வான இசக்கி சுப்பையாவும் ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இன்று இணைந்தார்.
இந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியும் காலியானதாக அறிவித்ததால், மொத்தம் தமிழகத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளன.
மேலும், இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.