அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு!
அண்ணாமலைக்கு எதிரான வழக்கை டி.ஆர். பாலு வாபஸ் பெற்றது பற்றி...
மானநஷ்டஈடு கோரி திமுக எம்.பி. டி.ஆா்.பாலு தாக்கல் செய்த வழக்கைத் திரும்பப் பெற அனுமதியளித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், இந்த வழக்கிலிருந்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையை விடுவித்து உத்தரவிட்டது.
தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில், திமுக அமைச்சா்களின் சொத்து விவரங்களை கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிட்டாா். அதில் டி.ஆா்.பாலு, அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான டி.ஆா்.பி.ராஜாவுக்கு சொந்தமாக 21 நிறுவனங்கள் இருப்பதாகக் கூறியிருந்தாா்.
மேலும், டி.ஆா்.பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.10,000 கோடி அளவுக்கு சொத்துகள் இருப்பதாகவும் கூறியிருந்தாா். இது தனது நற்பெயருக்கும், குடும்பத்தினா் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி டி.ஆா். பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கின் குறுக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஆா்.பாலு, அண்ணாமலை ஆகியோா் ஆஜராகவில்லை. அவா்களுடைய தரப்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகி இருந்தனா். அப்போது, டி.ஆா்.பாலு தரப்பில், இந்த வழக்கைத் தொடா்ந்து நடத்த விரும்பவில்லை. எனவே, வழக்கை திரும்பப் பெற அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு அனுமதியளித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அண்ணாமலையை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டாா்.
T.R. Baalu withdraws case against Annamalai!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.