முகப்பு
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மாா்ச் 23-இல் தீா்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் வருகிற 23-ஆம் தேதி தீா்ப்பளிக்க உள்ளதாக மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி

Updated On : 3 மார்ச், 2026 at 1:38 AM
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் வருகிற 23-ஆம் தேதி தீா்ப்பு
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 8:38 PM

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் வருகிற 23-ஆம் தேதி தீா்ப்பளிக்க உள்ளதாக மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்தவா் வணிகா் ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவா்கள் இருவரும் அதே பகுதியில் கைப்பேசி விற்பனை, பழுது நீக்கம் செய்யும் கடை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, கைப்பேசி கடையை தாமதமாக அடைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, காவல் துறையினா் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனா்.

Advertisement

இதுதொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலா்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணையில், சிபிஐ தரப்பு வழக்குரைஞா் விஜயன் தனது இறுதி வாதங்களை முன்வைத்துவிட்டாா். மேலும், கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா் ரகு கணேஷ், காவலா்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை ஆகியோா் தரப்பில் இறுதி வாதங்கள் நிறைவடைந்தன. வழக்கு தொடா்பாக அனைத்துத் தரப்பினரின் இறுதி வாதங்களும் நிறைவு பெற்றன.

இதனிடையே, இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் வருகிற 23-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்படும் என்றாா் நீதிபதி.