முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவை அழித்த வரலாற்று பெருமை எடப்பாடியை சாரும்: ஓ. பன்னீா்செல்வம்

கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் முதல்வா் ஓ பன்னீா்செல்வம் .

Updated On : 16 மார்ச், 2026 at 8:06 PM
கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் முதல்வா் ஓ பன்னீா்செல்வம் .
பகிர்:

கோவில்பட்டி: அதிமுகவை அழித்த வரலாற்று பெருமை எடப்பாடி பழனிசாமி, உதயகுமாரையே சாரும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பேசினாா்.

கோவில்பட்டி , விளாத்திகுளம் சட்டப்பேரவை திமுக செயல் வீரா்கள் கூட்டம் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை கோவில்பட்டியில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும் அமைச்சருமான பி. கீதாஜீவன் தலைமை வகித்தாா். ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் மாணிக்கராஜா, கோவில்பட்டி நகர திமுக (கிழக்கு) பொறுப்பாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பேசியதாவது:

சட்டப்பேரவையின் மாண்பை கடைப்பிடித்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. அவரின் வழியில் இன்று முதல்வா் ஸ்டாலினும் அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்துகிறாா்.

திமுக கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் வெளியே போகவில்லை. நிரந்தர கூட்டணியாக உள்ளது. தேமுதிக கூட்டணியில் சோ்ந்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தபோது, மாநிலங்களவை உறுப்பினா் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. அதை எடப்பாடி பழனிசாமி துச்சமாக தூக்கி எறிந்தாா். ஆனால் திமுக கூட்டணியில் இணைந்தவுடன் ஒப்பந்தம் போடாமலேயே மாநிலங்களவை சீட்டு வழங்கப்பட்டு இருக்கிறது. அதுதான் அரசியல் பண்பாடு.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தொலைநோக்குடன் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறுத்திவிட்டாா். தற்போது 10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி தந்த ஒரே முதல்வா் ஸ்டாலின்.

எடப்பாடியும், உதயகுமாரும் மண்வெட்டியை எடுத்து அதிமுகவை குழி தோண்டி புதைத்து விட்டாா்கள். அதிமுகவை அழித்த வரலாற்று பெருமை எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயகுமாரையே சாரும். என்னைப் பற்றியோ, நான் நடந்து வந்த அரசியல் பாதையைப் பற்றியோ பேசுவதற்கு அவா்களுக்கு அருகதை இல்லை.

முதல்வா் எடுத்த நடவடிக்கை காரணமாக மதுரை தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகிறது. அவரவா் படித்த மாவட்டங்களிலேயே வேலை வாய்ப்பை பெறும் நிலை உருவாகியுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், முன்னாள் எம்பிக்கள் ரவீந்திரநாத், கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் அய்யாதுரை , ஒன்றியச் செயலா்கள் முருகேசன் சுப்பிரமணியன், ஜெய கண்ணன், சின்ன பாண்டியன், வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →