பேரவைத் தேர்தல் 2026: தபால் வாக்கு செலுத்த விண்ணப்பிப்பது எப்படி?
தபால் வாக்கு செலுத்துவதற்கு விண்ணப்பிப்பது குறித்து....
தேர்தலில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்கு அளிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம்.
இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து தகுதி பெற்ற வாக்காளர்களும் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறுவதற்காக பல்வேறு கூடுதல் வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40% மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களித்து தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலர் விண்ணப்பம் பெற்றபின் அவர்களது தகுதியை சரிபார்த்து, தபால் வாக்குச் சீட்டை வீட்டிலேயே வழங்கி, நிரப்பிய பின் திரும்பப் பெறுவார்.
தபால் வாக்கு வசதியினை பெறுவதற்கு படிவம் 12D ஐ பூர்த்தி செய்து தேர்தல் அலுவலரிடம் 5 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்பின், இவ்வாக்காளர்கள் வீட்டிலிருந்தவாறே வாக்களிக்க ஏதுவாக வாக்காளரின் குடியிருப்பு பகுதிக்கு வாக்குப் பதிவு அலுவலர்கள் வருகை தரும் நாள் மற்றும் நேரம் குறித்து, 12 டி படிவத்தில் வாக்காளர் தெரிவித்த கைப்பேசி எண்ணுக்கு முன்னதாகவே குறுஞ்செய்தி அனுப்பப்படும். கைப்பேசி எண் குறிப்பிடாதவர்களுக்கு அஞ்சல் மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
அவ்வாறு குறிப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் வாக்குச் சாவடி அலுவலர் குழு வாக்காளர் வீட்டுக்குச் சென்று வாக்காளர் அடையாளத்தை சரிபாா்த்து, அந்த விவரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, வாக்காளரின் கையொப்பம், கைரேகை பெற்றுக்கொண்டு வாக்களிக்கும் முறை குறித்து விளக்கி அஞ்சல் வாக்குச் சீட்டினை வழங்குவர்.
வாக்காளர் கண்பாா்வையற்று அல்லது உடல்நலிவு காரணமாக வாக்களிக்க இயலாத நிலையில் இருப்பின், அவரது சார்பில் கட்சி சார்பற்ற வயது வந்த ஒருவரை, வாக்களிப்பது குறித்து ரகசியம் காப்பு உறுதிமொழி பெற்றுக்கொண்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை மாற்றுத்திறனாளிகள்தான் என்பதற்கு தகுந்த அரசு சான்றிதழ் நகலினை அளிக்கவேண்டும்.