9 ஆண்டுகளுக்குப் பின்... அதிமுக அலுவலகத்தில் டிடிவி தினகரன்!
அதிமுக அலுவலகத்துக்கு டிடிவி தினகரன் வருகை பற்றி...
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே இன்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
இதற்காக பாஜக மேலிடப் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளனர்.
கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக மூத்த நிர்வாகிகளும் வரவேற்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகளும், அதில், தமாகா-க்கு உள் ஒதுக்கீடாக 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாமகவுக்கு 17 தொகுதிகளும், அமமுகவுக்கு 10 அல்லது 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, சுமார் 9 ஆண்டுகள் கழித்து அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.