திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
திமுக நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தது தொடர்பாக...
திமுக நிர்வாகிகளை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(மே 3) சந்தித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 ஆம் தேதி(திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.
ஏப். 29 மாலை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது. இதில் பெரும்பான்மையாக திமுக ஆட்சியமைக்கும் என்றே கூறப்பட்டுள்ளன.
Advertisement
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை, கொமதேக கட்சியின் வேட்பாளரும் அக்கட்சி பொதுச் செயலருமான ஈ.ஆா்.ஈஸ்வரன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் நித்தியானந்தம் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்மையில் நேரில் சந்தித்தனர்.
மேலும், திமுக வேட்பாளர்களான அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சாக்கோட்டை அன்பழகன், ஜெயராமகிருஷ்ணன், டாக்டர் இந்திராணி, டாக்டர் ஆ.கா.தருண் உள்ளிட்டோரும் முதல்வரைச் சந்தித்தனர்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று(மே 3) சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தக் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி, அன்வர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு குறித்து அவர்களிடம் முதல்வர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.