நன்றிகெட்ட காங்கிரஸ்: ஆர். எஸ். பாரதி ஆவேச பேட்டி!
திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தது குறித்து...
தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ள நிலையில், ’நன்றிகெட்ட காங்கிரஸ், போகட்டும்’ என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
இது குறித்து திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி தினமணிக்கு அளித்த பேட்டி:
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் தற்போது விலகி தவெக உடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது, திமுக எப்படி பார்க்கிறது என்ற கேள்விக்கு, ”திமுக தொண்டர்கள் இதனை மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள். காங்கிரஸ், எங்கள் கூட்டணியில் இருந்து விலகுவதில் எந்தக் கவலையும் இல்லை” என்றார்.
Advertisement
இது தொடர்பாக ராகுல் காந்தியோ, காங்கிரஸ் தலைமையோ ஏதாவது சமாதானப்படுத்த முயற்சித்தார்களா? என்ற கேள்விக்கு, ”எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை, தலைக்குமேல் வெள்ளம் போனபின்பு, ஜான் என்ன, முழம் என்ன.
வந்தால் அவர்களோடு, வராவிட்டால் அவர்கள் இல்லாமல், அவர்கள் எதிர்த்தால் அவர்களையும் எதிர்த்து அரசியல் செய்வோம், கட்சியையும் நடத்துவோம்” என்று பதில் தெரிவித்தார்.
இது நாடுமுழுவதும் இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறதே? நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, ”இந்தியா கூட்டணியே இல்லை, நாடாளுமன்றத் தேர்தலோடு முடிந்துவிட்டது. நிதீஷ் குமார், மமதா பானர்ஜு என ஒவ்வொருவராக சென்று விட்டார்கள். இருந்தது நாங்கள் மட்டும்தான். அவர்கள்தான் செல்கிறார்கள். இருந்ததற்கு நன்றி, நன்றிகெட்டவர்கள் போகட்டும்” என்று தெரிவித்தார்.
பாஜகவை தடுத்து நிறுத்துவதற்காக தவெகவுடன் செல்வதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, ”இந்தத் திருவிளையாடல்களுக்கெல்லாம் யார் காரணம் என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும், அப்போது இப்படி பேசுகிறவர்கள் தலைகுணிந்து நிற்க வேண்டும்” என்றார்.