ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்
தமிழக வெற்றிக் கழகத்தின் ராயபுரம் பேரவை உறுப்பினர் விஜய் தாமு, அண்மையில் பெரிய அரிவாளால் கேக் வெட்டியிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.
இத்தனை நாள்களும் பள்ளி மாணவர்களும், இன்னும் சில இளைஞர்களும் பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது கத்தி மற்றும் அரிவாளால் கேக் வெட்டிக் கொண்டாடும் விடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுமே அவர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்துவிடும்.
இது பற்றி தெரியாத தவெகவின் பேரவை உறுப்பினர் தாமு, அருகில் இருப்பவர் எடுத்துச் சொல்லியும் கேட்காமல், அரிவாளால் கேக் வெட்டி அந்த விடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
Advertisement
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், தமிழக வெற்றிக் கழகத்தின் ராயபுரம் எம்எல்ஏ தாமு ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநர் என்று கூறப்பட்ட நிலையில், அவரது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், இன்னோவா கார், மோட்டார் சைக்கிள் இருக்கிறது என்று பதிவிட்டிருப்பது ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
தவெக தலைவர் விஜய்க்கு ஆட்டோ ஓட்டுநர் என அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களுக்கும் ஏழை ஆட்டோ ஓட்டுநர், தவெகவில் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில், அவரது சொத்து விவரத்தில் ஒரு ஆட்டோ கூட சொந்தமாக இல்லை என்பது பேசுபொருளாகியிருக்கிறது. அவர் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டுபவராக இருக்கலாம் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
இன்னமும் விஜய் ஆட்சிக்கு வரவில்லை. அவர் ஆட்சியமைக்க ஆதரவு கோரி வருகிறார். ஒரு பக்கம் ஆளுநரும் அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்த நேரத்தில் தலைவர் விஜய்க்கு உறுதுணையாக இருக்க வேண்டிய சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்வானவர்கள், அவர் ஆட்சிக்கு வந்தால் என்னவாகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பதே விஜய்க்கு வாக்களித்து முதல்வராக்க விரும்பிய மக்களின் கோரிக்கையை அமைந்துள்ளது.