தவறுதலாக அனுப்பிய ரூ, 15,682: ஆட்டோ ஓட்டுநரின் செயலால் நெகிழ்ந்த நிறுவனத் தலைவர்!
மும்பையில் தவறுதலாக அனுப்பிய ரூ. 15,682-ஐ ஆட்டோ ஓட்டுநர் காத்திருந்து திருப்பியளித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மும்பையில் தவறுதலாக அனுப்பிய ரூ. 15,682-ஐ ஆட்டோ ஓட்டுநர் காத்திருந்து திருப்பியளித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மும்பையில் ஹிங்லிஷ் என்ற விளம்பர நிறுவனத்தை நடத்தி வருபவர் ஷுபம் குணே. இவர் தனது நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற அழைத்திருந்த வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவரைச் சந்திக்க காலை 7 மணிக்குத் தொடங்கவிருந்த சந்திப்புக்கு சிறிது தாமதமாக ஆட்டோவில் சென்றுள்ளார்.
காலை நேர பரபரப்பில் தான் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு தரவேண்டிய தொகையான ரூ. 156 -க்கு பதிலாக ஜிபே-யில் ரூ. 15,682 அனுப்பிவிட்டு அதனை கவனிக்கக்கூட நேரமின்றி அவசரகதியில் சென்றுவிட்டார்.
Advertisement
Advertisement
பின்னர் அந்தச் சந்திப்பு எதிர்பார்த்ததைப் போல வெற்றிகரமாக முடியாத நிலையில் சோர்வுடன் தனது போனைப் பார்த்தபோது தான் தவறுதலாக அதிக பணத்தை ஆட்டோ ஓட்டுநருக்கு அனுப்பியது தெரியவந்தது.
வாடிய முகத்துடன் அங்கிருந்து கிளம்பியபோது அல்தாஃப் என்கிற அந்த ஆட்டோ ஓட்டுநர் அவரை இறக்கி விட்ட இடத்திலேயே காத்திருந்தார். தவறுதலாக அனுப்பிய மொத்த பணத்தையும் திருப்பி அனுப்பிய அல்தாஃப் ஆட்டோவில் பயணித்ததற்கான காசைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை.
ஆட்டோ சவாரி, நேரம் ஆகியவற்றை இழந்து இவ்வளவு நேரம் காத்திருந்ததற்கு அவருக்கான தொகையையாவது வாங்கிக் கொள்ளும்படி ஷுபம் குணே வற்புறுத்தியபோதும், “நம் இருவருக்கும் இது இந்நாளுக்கான தொடக்கம்” எனக் கூறி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அதற்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் ஷுபம் குணேவுக்கு வெளிநாட்டு வாடிக்கையாளர் மீண்டும் அழைத்து இணைந்து பணியாற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
உடனடியாக அன்று காலை அல்தாஃபுடனான நினைவு மீண்டும் அவருக்கு வந்துள்ளது. தன்னுடைய காலை நேரம் மிக மோசமானதாக இருந்ததைக் கண்டு சவாரிக்கான பணத்தைக் கூட வாங்காமல் சென்ற அல்தாஃபுக்கு ரூ. 500 அனுப்பிய ஷுபம் குணே, நன்றி தெரிவிக்கும் விதமாக அதனை அனுப்பியதாக தனது லிங்க்ட் இன் தள பக்கத்தில் இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்திருந்தார்.
இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஆட்டோ ஒட்டுநரின் இந்தச் செயலை அனைவரும் நெகிழ்வுடன் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.