உலக சாதனைக்காக 253 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி! யார் இந்த தேர்தல் மன்னன்?
1988 முதல் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வரும் தேர்தல் மன்னன் பத்மராஜன் குறித்து...
1988 முதல் நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் தேர்தல் மன்னன் பத்மராஜன் போட்டியிட்டு வருகிறார்.
சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் (67), கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக, நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
1988 முதல் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்கு மேலாக, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் உள்பட கூட்டுறவு அமைப்புக்கான தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.
Advertisement
அனைத்து தேர்தல்களிலும் குறைந்த வாக்குகளைப் பெற்று, தேர்தலில் அதிக முறை தோல்வியைத் தழுவிய வேட்பாளர் என்ற சாதனையைப் படைத்து லிம்கா உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
தொடர்ந்து தோல்வியடைந்தாலும், இறுதி மூச்சுவரையில் தேர்தலில் போட்டியிடுவேன் என பத்மராஜன் கூறுகிறார். தேர்தலில் வெற்றியை எதிர்பார்ப்பதில்லை என்றும், தேர்தலில் பங்கேற்பதே வெற்றி என்றும் அவர் கூறுகிறார்.
இதுவரையில் தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்காக மட்டும் சுமார் ரூ. 1 கோடிக்கும் மேலாக செலவழித்ததாகக் கூறும் பத்மராஜன், அதிகபட்ச வாக்குகளாக 2011 தேர்தலின்போது மேட்டூர் தொகுதியில் 6,273 வாக்குகள் பெற்றுள்ளார்.
தற்போது நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மேட்டூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, 390 வாக்குகளை பத்மராஜன் பெற்றுள்ளார்.