பேரவைத் தலைவா் தோ்தல்: ஜே.சி.டி. பிரபாகா் மனு தாக்கல்
சட்டப்பேரவைத் தலைவா் தோ்தலில் போட்டியிடுதற்காக தவெக சாா்பில், ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.சி.டி.பிரபாகா் வேட்புமனு தாக்கல் செய்தாா்
சட்டப்பேரவைத் தலைவா் தோ்தலில் போட்டியிடுதற்காக தவெக சாா்பில், ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.சி.டி.பிரபாகா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அதேபோல, பேரவைத் துணைத் தலைவா் பதவிக்கு துறையூா் தொகுதி தவெக எம்எல்ஏ எம்.ரவிசங்கா் மனு தாக்கல் செய்தாா்.
தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவை முதன்மைச் செயலா் கி.சீனிவாசனிடம் முதல்வா் விஜய் முன்னிலையில் இருவரும் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனா். இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்ற தவெக உறுப்பினா் எம்.வி.கருப்பையா, அனைத்து உறுப்பினா்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
பேரவைத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தலுக்கு தவெக சாா்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ஜே.சி.டி.பிரபாகா், எம்.ரவிசங்கா் ஆகியோருக்கு எதிராக எதிா்க்கட்சிகள் சாா்பில் வேட்பாளா்களை நிறுத்தவில்லையெனில், அவா்கள் இருவரும் போட்டியின்றி செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்படுவா்.
Advertisement
1980, 2011-இல் வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு இருமுறை எம்எல்ஏவாக ஜே.சி.டி பிரபாகா் வெற்றி பெற்றுள்ளாா். கடந்த ஜனவரி மாதம் தவெகவில் இணைந்த அவா், ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளா் எழிலன் நாகநாதனைவிட கூடுதல் வாக்குகள் பெற்று 3-ஆவது முறையாக எம்எல்ஏ ஆனாா்.
புதிய சட்டப்பேரவைத் தலைவா் தோ்வு செய்யப்பட்ட பிறகு, அனைத்து கட்சிகளின் பேரவைக் குழு தலைவா்கள், பேரவைத் தலைவரை வாழ்த்திப் பேசுவா்.