பெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோ
விஜய் மூலம் பெரியார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் இளம் தலைமுறையினருக்கு கொண்டுசெல்லப்படும் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் மூலம் பெரியார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் இளம் தலைமுறையினருக்கு கொண்டுசெல்லப்படும் என மதிமுக எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இல்லத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் இன்று (மே 11) வருகைப்புரிந்தார்.
வைகோவின் மகன் துரை வைகோ, வீட்டு வாசலுக்கு வந்து விஜய்க்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் விஜய்யை வீட்டினுள் துரை வைகோ அழைத்துச் சென்றார்.
Advertisement
வீட்டினுள் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வைகோ மாலை அணிவித்தார். பின்னர் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வீட்டிற்குள் வைகோவை சந்தித்து விஜய் நலம் விசாரித்தார். முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு, வைகோ வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
விஜய் சந்திப்பு குறித்து செய்தியாளர்களுடன் துரை வைகோ பேசியதாவது:
''மாநில வளர்ச்சிக்குத் தேவையாக நடவடிக்கைகளை முதல்வர் விஜய் எடுக்க வேண்டும். ஊழல் அற்ற அரசாங்கமாக விஜய் உடைய அரசு இருக்கும் என கூறியிருந்தார். அதனை ஆட்சிக்கு வந்த பிறகு செய்துகாட்ட வேண்டும். இளம் தலைமுறைக்கு பெரியார், அண்ணா குறித்து தெரியாது, ஆனால் விஜய் மூலம் அவர்கள் அதை தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை அண்ணாவும், பெரியாரும் முன்வைத்தனர். அதையே முதல்வர் விஜய்யும் தனது ஆட்சியில் கடைபிடித்தால் அது வரவேற்கத்தக்கது'' என துரை வைகோ குறிப்பிட்டார்.