பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம் வந்தது எப்படி? முதல்வர் விஜய் பகிர்ந்த சுவாரசியம்!!
பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம் வந்தது எப்படி என்பது குறித்து முதல்வர் விஜய் கூறினார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில், பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட எம். ரவிசங்கர் ஆகியோரை வாழ்த்திப் பேசினார்.
அப்போது முதல்வர் ஜோசப் விஜய், தாங்கள் பேரவைத் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தங்களை இந்த ஆசனத்தில் பேரவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் தங்களுடைய கரங்களைப் பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்தார்கள். இந்தச் சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால் சுவாரசியமாக இருக்கும்.
பெரிய வரலாறே இச்சம்பவத்தில் உள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள நாடாளுமன்றம் நடைமுறைகளைப் போன்றதே நம்முடைய நாடாளுமன்ற நடைமுறைகளும். மன்னர் ஆட்சி இருந்த காலத்திலேயே அங்கே நாடாளுமன்றம் இயங்கியுள்ளது. அக்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார்.
Advertisement
நாடாளுமன்றமும் இயங்கியது. அங்கே மன்னர் ஒரு பணியைச் செய்ய வேண்டுமென்று விரும்புவார். நாடாளுமன்றம் அவருடைய விருப்பத்தை பெரும்பாலும் நிராகரிக்கும். மன்னர் விரும்பிய காரியத்தை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்கிற செய்தியை, மன்னருக்கு சொல்ல வேண்டியவர் நாடாளுமன்ற தலைவர் ‘Speaker’ என்பார்கள்.
நாடாளுமன்ற கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் ‘Speaker’. அதற்கு துணிவு வேண்டும். சில பணிகளைச் செய்வதற்குதான் நாடாளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டுமே தவிர, அந்த ராஜ்யத்தில் உள்ள எந்தப் பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு. தான் விரும்பியதை நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது என்று சொல்லும் Speaker-க்கு மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார். தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார்கள். இது பலமுறை நடந்ததால் யாருமே இந்த ‘Speaker’ பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள்.
எனவே, புதிதாக நாடாளுமன்றம் அமையும்போது ‘Speaker’ பதவிக்கு ஒருவர் அறிவிக்கப்பட்டவுடன் அவர் உடனே தலை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார். அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி, அவர் கைகளைப் பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்தக் காலத்தில் இருந்து வந்த மரபு. ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும், இம்மரபு தொடர்கிறது. நிச்சயமாக தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருமே உங்களுக்கு உதவிகரமாகவே இருப்பார்கள் என்கிற வாக்குறுதியை இந்நேரத்தில் அளிக்க விரும்புகிறேன்.
பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் பேரவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பை உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள் என்று விஜய் கூறினார்.