எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது ஏன்? 4 பேருக்கும் பேரவைத் தலைவர் நோட்டீஸ்!
அதிமுக எம்எல்ஏக்களாக பதவியேற்று ராஜிநாமா செய்த 4 பேருக்கும் பேரவைத் தலைவர் நோட்டீஸ்....
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது தொடர்பான புகாரில் விளக்கமளிக்க நால்வருக்கும் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழக பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெறாத தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்களில் 21 பேர் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பினர்.
ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகிய 4 பேரும் அதிமுகவில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
Advertisement
Advertisement
21 பேரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் அவா்களை மன்னித்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததையடுத்து அந்த 21 பேர் மீதும் எந்த தகுதிநீக்க நடவடிக்கையும் இல்லை என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.
அதேநேரத்தில் ராஜிநாமா செய்த நால்வர் மீதும் நடவடிக்கை தொடரும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நால்வர் மீதான கட்சித் தாவல் தடைச் சட்ட புகார் இன்னமும் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுக்கு பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
'எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது ஏன்? உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?' என ராஜினாமா செய்த நால்வருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் 7 நாட்களில் அவர்கள் விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.