பட்டாசு வெடித்து, பேனர் வைத்து மக்களுக்கு இடையூறு செய்யாதீர்! தவெக தலைமை எச்சரிக்கை!
பட்டாசு வெடித்து, பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு தவெக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...
பேனர்கள், பதாகைகள் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு தவெக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உரிய முன் அனுமதி பெறாமல், சாலையில் பட்டாசு வெடித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர் பரணி பாலாஜியின் ஆதரவாளர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், அந்தப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சாலையின் ஓரமாக வாகனங்களை நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பொதுச்செயலர் என். ஆனந்த், எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
அந்தப் பதிவில், “தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர் முதல்வர் விஜய், மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
TVK general secretary N. Anand warns party members Do not cause inconvenience to the public by bursting firecrackers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.