உள்ளாட்சித் தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ஆனந்த் பேச்சு!
பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆனந்த் பேசியதாவது...
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அண்ணா தொழிற்சங்கத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது:
Advertisement
Advertisement
”மாற்றுக்கட்சியில் இருந்து தவெகவில் இணைந்தவர்களுக்கு மரியாதை என்பது கண்டிப்பாகக் கிடைக்கும். அமைச்சர் என்ற பதவியை முதல்வர் விஜய் கொடுத்துள்ளார். ஆனால், நாங்கள் உங்களில் ஒருவராக மட்டுமே இருப்போம்.
புதிதாக வந்தவர்களிடம் எந்தவித பாகுபாட்டையும் பார்க்க மாட்டோம். விஜய் சூப்பர் ஸ்டாராக வருவார், முதல்வராக வருவார் என்று எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், மிதிவண்டியில் சென்று போஸ்டர் ஒட்டியவர்கள், இன்று அமைச்சர்களாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர்.
புதிதாய் வந்தவர்களுக்கும், ஏற்கெனவே உள்ளவர்களுக்கும் அச்சம் இருக்கலாம், அவர்கள் யாரையும் நம்முடைய முதல்வர் கைவிடமாட்டார்.
புதிதாய் வந்தவர்கள், தவெகவினருடன் இணைந்து செயல்படுவார்கள். அதேசமயம், புதிதாய் வந்தவர்களுடன் தவெகவினரும் இணைந்து செயல்படுவார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. இதில், 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும்
எங்களுக்கு லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை, ஊழல் செய்ய மாட்டோம் என்பதை, நாங்கள் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம். ஏன் என்று சொன்னால் ஊழல் செய்தால் அடுத்த விநாடியே, முதல்வர் நடவடிக்கை எடுத்துவிடுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, நாங்கள் எந்தக் காரணத்தை கொண்டும் ஊழல் செய்ய மாட்டோம், ஊழல் செய்யவும் வரவில்லை, மக்களுக்கு சேவை செய்வதுதான் எங்களது நோக்கமாக இருக்கும். ஆகவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வரும் பஞ்சாயத்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்” என்றார்