நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்.எல்.ஏ. பங்கேற்கலாம்: உச்சநீதிமன்றம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்.எல்.ஏ. பங்கேற்கக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்து...
தமிழக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்.எல்.ஏ., ஆர். சீனிவாச சேதுபதி பங்கேற்கக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (மே 13) தடை விதித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயா்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக திருப்பத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ ஆா். சீனிவாச சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் முன்பு இன்று (மே 13) விசாரணைக்கு வந்தது.
Advertisement
இரு தரப்புகளின் மூத்த வழக்ககுரைஞர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், எதிர் தரப்பு வழக்குரைஞருக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
மேலும், இடைப்பட்ட காலத்தில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைப்பதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கே.ஆா். பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும், தவெக சாா்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றிருந்தனா். ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிா்த்து கே.ஆா். பெரியகருப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
அதில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் (எண் 185) தொகுதிக்குச் செல்ல வேண்டிய தபால் வாக்குச் சீட்டு ஒன்று, தவறுதலாக மற்றொரு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் தொகுதிக்கு (எண் 50) அனுப்பப்பட்டதாகவும் அது குறித்து தோ்தல் அலுவலரின் கவனத்துக்கு வந்தபோது, அவா் அந்த வாக்குச்சீட்டை உரிய தொகுதிக்கு திருப்பி அனுப்பாமல் நிராகரித்துள்ளாா். இப்பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் வரை, பேரவை நடவடிக்கைகளில் சேதுபதி சீனிவாசன் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்றும் பெரியகருப்பன் கேட்டுக்கொண்டிருந்தாா்.
இந்த வழக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழக்காக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்து, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்புகள், பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்புகள் அல்லது அவையின் பலத்தைப் பரிசோதிக்கும் எந்தவொரு வாக்கெடுப்பிலும் பங்கேற்கக் கூடாது என்று தடை விதித்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தது.