எலக்ஷனாலும் கரெக்ஷனாலும் மக்கள்தான்; அப்டேட் ஆகி மீண்டும் வருவோம்! - மு.க. ஸ்டாலின்
தோல்வியை நினைத்துக் கொண்டு முடங்கிவிட மாட்டேன். உடனே அப்டேட் ஆகி மீண்டு வருவேன் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தோல்வியை நினைத்துக் கொண்டு முடங்கிவிட மாட்டேன். உடனே அப்டேட் ஆகி மீண்டு வருவேன் என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் யாரும் எதிர்பார்த்திராத வகையில், வெறும் 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை, தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
Advertisement
இந்த நிலையில், தேர்தல் தோல்வி குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக தோல்வி குறித்து திமுகவினரிடம் கருத்துக்கேட்பதற்காக புதிய வலைதளம் ஒன்றை ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில், “எல்லோருக்கும் வணக்கம், ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் உங்களுக்காக விடியோவில் பேசுகிறேன். கடைசியாக தொகுதி மறுவரையறையின்போது விடியோவில் பேசியிருந்தேன். அதைத் தொடர்ந்து தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்டன.
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கடந்த இரண்டு வாரங்களாகவே எல்லோருடைய வீடுகளிலுமே தொடர்ந்து செய்தி சேனல்கள் மட்டும்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளில் திமுக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இதற்கு அவர் காரணம்; இவர் காரணம் என்று யாரும் யாரும் மீதும் பழிபோடாதீர்கள். தலைவராக இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன். வெற்றி கிடைக்கும்போது எனக்குத்தான் அந்த கிரெடிட் வந்து சேருகிறது.
அதேபோல, தோல்வி அடையும்போதும் அந்தப் பழியை நான்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு நல்ல தலைவருக்கான இலக்கணம். சரி தோற்றுவிட்டோம், அதற்காக அதையே நினைத்து முடங்கிடமாட்டேன்.
உடனே அப்டேட் ஆகி மீண்டு வருவேன். நாம எல்லாருமே அப்படித்தான் வரணும். அதுக்கு உங்களோட ஆலோசனைகள், பரிந்துரைகள், ஐடியாக்கள் எனக்கு வேணும். எலக்ஷனா இருந்தாலும் கரெக்ஷானா இருந்தாலும் உங்ககிட்டதான் வந்தாகணும். மக்கள்தான் எல்லாம்.
இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு என்ன காரணம், திமுக இன்னும் எப்படியெல்லாம் உங்களுக்காக உழைக்கணும்னு நீங்க நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க. உங்களோட கருத்துக்களை ஓப்பனா சொல்லுங்க.
அதுக்காகத்தான் இந்த 'உடன்பிறப்பின் குரல்' வெப்சைட். இதுல உங்க கருத்துக்களைப் பதிவிடுறது ரொம்ப சிம்பிள். உங்க வாய்ஸ்லேயே பேசி கருத்துக்களைச் சொன்னீங்கன்னா அதுவே டைப் ஆகிடும். நேரடியா நீங்களே டைப் பண்ணியும் சொல்லலாம்.
இல்லன்னா ஒரு பேப்பர்ல எழுதி அந்தப் போட்டோவை அப்லோட் பண்ணலாம், டாக்குமெண்ட்டா அனுப்பலாம். உங்க கருத்துகள் எனக்கு வந்து சேர்ந்துடும். அதையெல்லாம் படிச்சு, பரிசீலிச்சு நாம அடுத்தக்கட்ட நடவடிக்கையை வடிவமைக்கப் போறேன்.
நம்மோட அணுகுமுறை, சிந்தனை, செயல்பாடு எல்லாத்தையும் மாத்தியாகணும். காலத்துக்கு ஏத்த மாதிரி எவால்வ் ஆகித்தான் ஆகணும். உங்களோட கருத்துக்களின் அடிப்படையில 'DMK 2.0' வரும். கட்சியோட எல்லா மட்டத்துலயும் தேவையான மாற்றங்களைச் செய்யப்போறேன். இதனால், அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் இந்த இயக்கம் உயிர்ப்போடு இயங்கும், உங்களுக்காக இயங்கும். உடன்பிறப்பே... நீங்க சொல்லுங்க!.. நான் கேட்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.